
வீட்டின் தெற்கு மூலையில்
ஓர் சிற்றெரும்பு அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது..
உற்று கவனிக்கையில்
பின்னப்பட்டிருந்த
சிலந்தி வலையில்
சிக்கிய அவ்வெறும்பு
மரித்திருந்தது..
அதன் மறுபுறத்தில்
ஓர் சிலந்தி தன் இருப்பை
இழைத்து கொண்டிருந்தது..
அப்போதே இழைக்கப்பட்ட
அதன் வலையின் மினுமினுப்பு
நெசவு நெய்தலை
ஒத்திருந்தது...
எட்டுக் கால்களில்
ஒவ்வொன்றையும்
விதம் விதமாய் அசைத்து
உள்ளும் புறமும் உந்தியது..
மெல்லிய இழையொன்றை
லாவகமாய் இழுத்தபடி
வேறொன்றில் இணைத்தது..
இப்படியாய்
பட்டா ஏதுமில்லாமல்
வெற்றிடத்தை ஆக்கிரமித்து
சுவற்றின் மூலையை
அகன்ற வலை ஒன்றால்
நிரப்பியது..
காற்றின் ஸ்பரிசத்தில்
மென்மையாய் மிதந்த
அம்மெல்லிய வலை
அறுந்து விட்டிருக்கவில்லை...
செங்கற்கள் மண்
அஸ்திவாரம் பூச்சுக்கள்
ஏதுமில்லாமல்
தன்னை மட்டும் கொண்டு
தரித்த அதன் இருப்பினை
ஏனோ கலைக்க இயலாமல்
விட்டுச் சென்றேன்..















