
பிறிதொருநாள் எதிர்பார்த்த
மழையானது
இன்றே தீவிரப்பட்டிருந்தது....
அது
முழுக்கக் கொட்டித்தீர்த்தது
ஓய்ந்து களைத்துப் போனது...
முன் வாசலில்
விரும்பி குளித்த
செவ்வந்தி மொட்டொன்றில்
வழிந்து கொண்டிருந்தது
மிகுதிப்பட்ட
நீரானது...
நீர்த் திவளைகள்
சிதறலாய் வரைந்திருந்தது
கண்ணாடி சன்னலில்
சுவை தேடும் எனது
நாவிற்கும் தேநீர்
கோப்பைக்கும் இடைப்பட்ட
தூரமானது
வெகுநிதானமாய் கடக்கப்பட்டது...
விலக்கி வைத்திருந்த
அவனது எண்ணங்களை
நேரமானது
மென்று கொண்டிருந்தது..
சன்னலின் வழியே
மௌனமாய் தீண்டிய
காற்றானது
அவனது முத்தம்தனை
ஞாபகப்படுத்திச் சென்றது..
அவன் மீதான கோபங்களின்
அடர்த்தி நீர்த்துப் போயிருந்தது...
லேசாகியிருந்தது
வானமானதும்
மனமானதும்...
நாளை
முன்வாசலின் செவ்வந்தி மொட்டு
விரிந்தபின் புன்னகைக்க கூடும்
மேசை மீதிருக்கும் இரு
தேநீர்
கோப்பைகளைக் கண்டு..