Tuesday, March 30, 2010

மௌனமென்னும் ப்ராய்ச்சித்தம்



ஓயாது பேசிய சொற்கள்
ஓய்வெடுக்கின்றன
அவளிடம்...

பூ விற்பவளிடமும்
காய்கறிகாரனிடமும்
சண்டையிட
தோன்றுவதில்லை
அவளுக்கு..

இப்பொழுதெல்லாம்
மௌனம்
தேவை எனப் படுகிறது
அவளுக்கு...

கதவின் அழைப்பு மணி
ஒலிக்க நேர்கையில்
அவனாக இருக்க வேண்டுமென
அடம் பிடிக்கிறது
அவள் மனம்..
ஏமாற்றத்திலேயே
முடிவடைகிறது ஒவ்வொரு
கதவு திறப்பின் போதும்...

அவனுள்
நெருஞ்சி முள்ளாய்
நெருடி இருக்கக் கூடும்
அவளது கூர் சொற்கள்

உஷ்ண வார்த்தைகளை
உதிர்த்த பின்தான்
உணர்கிறாள் அவனது
காயத்தின் ஆழத்தை..


சில காயங்களை ஆறவிட
மௌனம் எனும் மருந்து
தேவைப் பட்டே ஆகிறது..
தவற்றிற்கு தேடும்
பிராய்ச்சித்தம் போல்..


Friday, March 26, 2010

உனது நட்பின் விளிம்பில்.....



நமது நெடுந்தூர
பயணத்தின் போது
விடுபட்ட வார்த்தைகளை
மிச்சமிருந்த சிநேகங்களை

ஒற்றை வரியில்
ஒரு நிலா பொழுதில்
அலைபேசியில்
அனுப்பி வைத்தாய்...
"ஐ மிஸ் யு" என...

உனக்கான காதலை
அழகாய்தான் புரிய வைத்தாய்
குறுந்தகவலில்...

உன் அடுத்த அழைப்பில்
என்ன பேசுவது என
தெரியாமல் நான்
வெக்கப்பட்டுக் கொண்டிருந்த
சமயம்...

உனது அழைப்பு
கண் சிமிட்டியது என்
அலைபேசியில்...

Wednesday, March 24, 2010

பகல் கனவுகள்..!!!



கரை படிந்த பற்களினூடே
வெறுமையுடன் சிரித்து
வியர்வையில் கண்ணீரும்
கலந்து வெளியேற
வெறும் பாதம் தேய
வீதியில் கூவி பழங்களை
விற்கிறான் அவன்

வட்டிகளை அடைத்திடனும்
சிறு வீடொன்று கட்டிடனுமென
கனவுகள் நிறைய அவன்
கண்களில் தெரிய
நடத்துகிறான் நாட்களை....

பட்டிணத்தில் படிக்கும் மகன்
மன சுமையை இறக்குவானென
தலையில் சுமையை
தாங்கியபடி கூவி
கொண்டே செல்கிறான் அவன்...

தந்தையின் கனவறியா மகன்
தறி கெட்டு செல்லும் பாதைக்கு
வழி கேட்டு செல்கிறான்..
மது மாது போதையில் தந்தைதன்
உணர்வுகளை எரிக்கிறான்..

தந்தையின் கனவுகளை
வீதியில் விற்கிறான்...
விடை தெரியா கனவுகள்
விடை பெற்றுக் கொள்கிறது
மெல்ல மெல்ல.....

Tuesday, March 9, 2010

ஒற்றை காட்டுப் பூ !!!




சிறு ஓடையின்
சல சல வென
ஓட்டத்தில்
மென்மையடைந்த
கூழாங்கற்கள்
ஓடையுடன் இசைந்து
தாளமிட....

பட படவென
பறந்த பறவைகள்
விட்டுச் சென்ற
சிறகுகள்
காற்றில் நடனமாட

குட்டி ஒன்றை
தொலைத்த மானொன்று
திரிந்தாட...

இரவு பகல் பார்த்தறியா
ஊர்ந்து வரும் ஜந்துக்கள்...

வேட்டை முடிந்து
இளைப்பாறும் மிருகங்கள்.....
மீதமான சதைகளை
நோட்டமிடும் வல்லூறுகள்...

இரவினில் அலறும்
ஆந்தை கூட்டமொன்று
திகிலை பரப்பியது...

நிலவின் கரிசனம்
காய்ந்த சிறகுகளின் மீதும்
பட்டு ஜொலித்தது..
மரங்களின் சண்டைகளில்
பற்றி எரிந்தது காடு...

இத்தனை ஆரவாரங்களிலும்
மயான அமைதிகளிலும்
ஓசை இல்லாமல் பூத்த
ஒற்றை பூ காட்டினையே
மணக்கச் செய்ததாம்!!!