
ஓயாது பேசிய சொற்கள்
ஓய்வெடுக்கின்றன
அவளிடம்...
பூ விற்பவளிடமும்
காய்கறிகாரனிடமும்
சண்டையிட
தோன்றுவதில்லை
அவளுக்கு..
இப்பொழுதெல்லாம்
மௌனம்
தேவை எனப் படுகிறது
அவளுக்கு...
கதவின் அழைப்பு மணி
ஒலிக்க நேர்கையில்
அவனாக இருக்க வேண்டுமென
அடம் பிடிக்கிறது
அவள் மனம்..
ஏமாற்றத்திலேயே
முடிவடைகிறது ஒவ்வொரு
கதவு திறப்பின் போதும்...
அவனுள்
நெருஞ்சி முள்ளாய்
நெருடி இருக்கக் கூடும்
அவளது கூர் சொற்கள்
உஷ்ண வார்த்தைகளை
உதிர்த்த பின்தான்
உணர்கிறாள் அவனது
காயத்தின் ஆழத்தை..
சில காயங்களை ஆறவிட
மௌனம் எனும் மருந்து
தேவைப் பட்டே ஆகிறது..
தவற்றிற்கு தேடும்
பிராய்ச்சித்தம் போல்..


