
தற்சமயமே நிகழ்ந்திருக்ககூடும்
அந் நிகழ்வு..
பால்காரனின் கிண்கிணி
சப்தத்தின் போதோ..
வெண்ணைய்காரியின்
கூவலின்போதோ..
சளக் சளக் கென ஓர்பெண்
வாசல் தெளிக்கும்போதோ..
யாரோ ஒருவர்
அன்றைய நாளிதழின்
வாசம் நுகர்ந்த போதோ..
இருசக்கர வாகனமொன்று
வேகமென கடந்த போதோ..
ஆனால் வெகு தற்சமயமே
நிகழ்ந்திருக்ககூடும்...
அசைவு அடங்கிய
பட்டாம் பூச்சியின்
ஸ்பரிசம் பெற்றிருந்தது
நடுச் சாலையொன்று!!

