Monday, June 21, 2010

நிகழ்வு..!!



தற்சமயமே நிகழ்ந்திருக்ககூடும்
அந் நிகழ்வு..

பால்காரனின் கிண்கிணி
சப்தத்தின் போதோ..

வெண்ணைய்காரியின்
கூவலின்போதோ..

சளக் சளக் கென ஓர்பெண்
வாசல் தெளிக்கும்போதோ..

யாரோ ஒருவர்
அன்றைய நாளிதழின்
வாசம் நுகர்ந்த போதோ..

இருசக்கர வாகனமொன்று
வேகமென கடந்த போதோ..

ஆனால் வெகு தற்சமயமே
நிகழ்ந்திருக்ககூடும்...

அசைவு அடங்கிய
பட்டாம் பூச்சியின்
ஸ்பரிசம் பெற்றிருந்தது
நடுச் சாலையொன்று!!

Monday, June 7, 2010

இயல்புக்கு பின்....!!!!




தீபாவளி நேரம்.....
தீபங்களின் மின்மினிகள்
வெடிச் சத்தங்கள்
வான வேடிக்கைகள்
இவை யாவுமே
பாதிக்கவில்லை
அவ் வகதி முகாமில்...

அங்கே சிறுமி ஒருத்தி
அகதியாய்-அவள் வயது
எட்டு இருக்கும்....
சிதறா சிந்தனையில்
வெறித்து நோக்கினாள்
கடலினை நோக்கி....

அவள் அருகில் சென்றேன்..
"பட்டாசு வெடிக்கலையா?"
என்னை ஒரு கணம்
உற்று நோக்கி
மீண்டும் வெறித்தாள்
கடலை நோக்கி.....
"பிடிக்கவில்லையா"??
இல்லை என்று
தலை ஆட்டினாள்..

அவள் சூழ்நிலை
மாற்ற விரும்பினேன்...
"கண்ணாமூச்சி ஆடலாமா?"
வாய் திறந்தாள்...
"அப்படி எண்டால் என்ன?"
"நீ ஒளிந்து கொள்...
நான் தேடுகிறேன்"-என்றேன்
"இதைத்தான் எங்களது ஊரில்
நிதமும் செய்யறம்"

சுருக் கென்றது
சுடு சொல் வதைத்தது..

பின் அவளே தொடர்ந்தாள்...
"வெடிச் சத்தம் கேக்கயில்
நிலத்தில் தோண்டிய
குழிகளில் பதுங்குவம்
வயல்களுக்கு உரம்
தெளிப்பது போல
வெடிகுண்டுகளை
வான ஊர்தியிலிருந்து
வீசுவர்...
உங்கள போல் அங்கே
சுதந்திரமாய்
நடக்க இயலாது
நானும் எண்ட தோழியும்
கதைத்துக் கொண்டே நடக்கையிலே
கண்ணிவெடியில்
கால் வைத்து
குழைந்து போனள் அவள்..
கதறியபடி நான்.....

ஒரு மாலை நேரம்
வெடிச் சத்தம் கேக்க...
சாப்பிட்டுக் கொண்டிருந்த நாங்க
பதுங்கு குழிக்குள்
ஒதுங்க வெளியே வந்தம்
"நீங்கள் போங்கள்
செய்து வைத்த
உணவு கொண்டு வாறன்"
எண்டு அம்மா மீண்டும்
சென்றள் வீட்டினுள்...

பதுங்கு குழியில்
பதுங்கியபடி
பாத்துக் கொண்டிருந்தம்
அம்மா வருகையை...
இருகைகளிலே உணவோடு
இரைப்புடன் ஓடி வந்தள்...

பாதி தூரத்தில்
பாவிகளின் குண்டுகளில்
வெடித்துச் சிதறினள்
எண்ட அம்மா..!!

எண்ட நான்கு வயது தம்பி
அறியா சிறுபிள்ளை அவனுக்கு
ஒண்டும் விளங்கயில்லை
சிறிது காலத்தில் அவனும்
செத்துப் போனன் உணவின்றி

இண்டைக்கு
என் அப்பா எவ்விடம்
ஏதும் அறியலை"

சொல்லி முடித்தாள்..

கண்ணீர் வழிய
வெறித்துப் பார்த்தாள்..
சிறு மௌனத்திற்கு பின்
நான் கூறினேன்...
"கவலை படதே ஒருநாள்
காலம் கனிந்து வரும்
நீயும் விளையாடுவாய்
சுதந்திரமாய் பார்
இயல்புக்கு பின்."

என்னை நோக்கினாள்
ஆழமாய் அவள்...
வெறுமையாய் சிரித்தாள்...
தொண்டைக்குழியை
அடைத்த அவளின்
துக்கங்களை மீறி
மெதுவாய்
வெளிப்பட்டது அவளது
வார்த்தைகள்...
"இயல்புக்கு பின்??...
இதுவே இயல்பாகி போனது...!!"

எனக்கு வலித்தது
அவள் வார்த்தைகள்...

அன்புடன் பொய் !!!



இரு கண்கள் விரிந்து
சிறு விரல் அசைத்து
மழலையினுள் எழும்
வியாக்கானங்கள்...

காதலன் காதலியை
உருவகப்படுத்தும் படிமங்களும்....

எதுகையில் பிடித்து
மோனையில் கோர்த்து
நீளும் கவிதைகளென..

நிலாபொழுதினில்
நினைவூட்டபடும்
நிலவினுள் நிலவும்
பாட்டியை பற்றியதாகினும்..

கடன் கேட்டோ கொடுத்தோ
கழிப்பவரின் வருகையை
சாத்தப்பட்டேயிருக்கும்
கதவும் அதன் இடுக்குகளில்
மறைக்கப்பட்ட உண்மைகளும்...


ஊர்ஜிதப்படுத்துகின்றன....
வகையான பொய்கள்
வரவேற்கவேபடுகின்றன
எப்பொழுதும் யாராகினும்..