Tuesday, August 24, 2010

தினமொரு ராஜகுமாரன்..!!



சன்னல் சட்டங்களை
பற்றியபடி
பதிந்த விரல்கள்..
சற்று மேல்
இரு புள்ளியாய்
சிறுத்த கண்கள்
எப்பொழுதும்
தென்படுகிறது
அவ்வீட்டினில்...

அக் கண்களின் ஏக்கங்கள்
வாடைக் காற்றை கிழித்து
நேர் கோடாய்
நிறுத்தப்படுகிறது
அவ்வீதியினில்...

நிரம்பப்பெறா
ஆசைகளைக் கொண்டு
நிரப்பியிருந்தது
அவள் வயது
நா வெட்டென...

கரு வனத்தினுள்
முளைத்த
வெண் கம்பிகளும்..
வலிகள் பிரசவித்த
கோடுகள் பதிந்த
முகமுமே
நிர்ணயித்தன
அவளது விலையை...

பரிகாரங்கள்
ஏதுமில்லா அவளது
கோவில் பிரவேசங்கள்
சாட்சியாயிருந்தன
செவ்வாய் தோஷமும்
இல்லையென..

பூச்சுகள் உதிர்ந்த
சுவர்களும்
கம்பிகளில் தொங்கும்
நிறம் மங்கிய கிழிசல்
ஆடைகளும்
ஒப்புக்கொண்டன
இயலாமை என்பதை...

ஆனந்த பைரவி
கல்யாணி ராகங்களில்
அரும்பிய காதல்களை
சஹானாவிலும்
முகாரியிலும்
தொலைத்திருந்தாள்..

எவர் பிடிக்கவில்லை
என்றாலும் அவள்
விசனப்பட போவதில்லை...

சன்னல் சட்டங்களுக்கு
அப்பால் செல்லும்
ஏதோ ஓர் ஆண்மகன்
அவளது
அன்றைய இரவின்
ராஜ குமாரனாய்
இருக்கப் பெறுகிறான்...

தற்காலிகமாய் அது
போதுமானதாகியிருந்தது
விதி எழுதிய
அவளது வலிகளை
அழிக்க...

எப்பொழுதாவது
அவ்வீதியின் வழியே
நீங்கள் போக நேரிடலாம்...

அவள் விடுத்த
கனவுகளும் ஆசைகளும்
வீதியில்தான் அலைகிறது..
அதன் வாசத்தை நீங்கள்
நுகர நேரிடலாம்...
அதன் மீது
மோதிட நேரிடலாம்...

அவ்வாறெனில்...
ஒரு கணம்
அச் சன்னலை
பார்த்துவிட்டுச்
செல்லுங்கள்...

அன்றிரவு
அவள் கனவின்
ராஜ குமாரன்
நீங்களாகவும்
இருக்கலாம்...!!!