Monday, December 21, 2009

தோழி எனும் பொக்கிஷம்!


ஏழு வயதென ஞாபகம்
பள்ளிக்கு முதல் நாள்
புதிதாய் வந்த என்னிடம்
பரிச்சயம் ஆனவள் போல்
ஒட்டிகொண்டாய் நீ!

பள்ளியில் உனக்கு தெரிந்த
இடத்துக்கெல்லாம் என்னையும்
இழுத்துச் சென்று ஆச்சரியமாய்
காண்பிப்பாய்-எனக்கும் அவைகள்
தெரியவேண்டுமென்று!

உன் வீட்டில் எது வாங்கி தந்தாலும்
ரகசியமாய் என்னை மட்டும்
கூப்பிட்டு காண்பிப்பாய்!

எனக்கு பட்டாம்பூச்சி பிடிக்கும் என்று
எங்கேயோ தேடி பிடித்து அதை மறைத்து
என் உள்ளங்கையில் வைத்து உன்
கையால் பொத்தி மெதுவாக திறந்தாய்

குறுகுறுவென ஏதோவொன்று இருகிறதே என
பார்ப்பதற்குள் பறந்து போன பட்டாம்பூச்சியை
அகல கண்திறந்து பார்த்தேன் - நீ
கை தட்டி மகிழ்ந்தாய்!

நம் இருவர் கையிலும் ஒட்டி சென்ற
வண்ணங்கள் நம் கன்னத்துக்கு
இடம் மாறியது...
கவிதையாக மாறியது அந்நாள்!

சண்டையிட்டு பேசாத
சமயங்களில் மௌனங்களும்
பேசிக்கொண்டு இருந்தன
நம்மிடையே!

பதினைந்து வயதில் வந்த
முதல் முகப்பருவை உன்னிடமே
முதலில் காண்பிக்க வேண்டுமென
கன்னத்தை மூடிக்கொண்டே
ஓடி வந்து உன்னிடம்
காண்பித்தபோது உன் வீட்டில்
எல்லோரும் சிரித்தார்கள் - நீ மட்டும்
வெட்கமாய் தொட்டு பார்த்தாய்!


மழை காலங்களில் சைக்கிளை
உருட்டி செல்லும்போது எங்கேயோ
ஒலித்து தேய்ந்து போன பாடலின்
மீதி வரிகளை நாம் பாடிக்கொண்டே
சென்ற நாட்கள் நம் மனதில்
மண்வாசனையாய்!

அத்தனை நினைவுகளும் சம்பந்தமே
இல்லாமல் இன்று விழுகின்றன
என் குழந்தைக்கு
கதை சொல்லும் இரவுகளில்!


2 comments: