Thursday, February 2, 2012

சுயம் !!!!



தேட இயலாத பெருங்கூற்றினை
தேடித் திரிந்தாள்..
அது தன்னால் மட்டுமே முடியுமென
நகைத்தாள்....

பின்வரும் யாதொரு நாள்
தன் சுயம் வெளிப்படும் எனவும்
தரணியில் தன் புகழ் விரியு மெனவும்
சொல்லி சொல்லி சிறகு விரித்துப்
பறந்து கொண்டிருந்தாள்...

நாற்திசையில் எய்தஅம்பினால்
குருதி ஒழுகுவதையும் கவனிக்க தவறினாள்

கைகள் கட்டி தான் பாதாளத்தில்
வீழ்வது போல் கனவு கண்டிருந்த வேளையில்
தன் பிம்பம்தனை தொலைத்ததாக
சொல்லிப் புலம்பினாள்

அந்த பின்வரும் யாதொரு நாளில்
தன் சுயத்தை முழுவதுமாய்
இழந்திருந்தாள்!!!

Tuesday, January 10, 2012

ஓர் துரோகம் ஓர் மன்னிப்பு !



சிறுக சிறுகச் சேகரித்த
சுமைகளைக் கொண்டு ஓர்
துயரக் கூட்டினை கட்டியிருந்தேன்
நான்!!!

போகிறப் போக்கில் ஓர்
பெருந் துரோகத்தை
வீசி விட்டிருந்தான்
அவன்.....

ஏமாற்றங்களை உதிர்த்துக் கொண்டே
கண்ணீர்களை கொண்டு நிரப்பினேன்
அக் கூட்டினை..

பெருங் கூச்சலிட்டபடியே இருந்தன
துரோகமும் வன்மமும்...
சிறிதும் பெரிதுமாய்
புலம்பல்கள் ...

பின் நீண்டிருந்த நேரந்தனில்
விசும்பல்கள் வெதும்பியபடியே
உறங்கிப் போயின....
நிசப்தம் தளும்பிய சமயத்தில்
எட்டிப் பார்த்தேன்

ஓர் மன்னிப்பு துளிர் விட்டிருந்தது..
நான் பார்த்து விட்டிருந்த கணத்தில்
நிர்மூலமாகியிருந்தது அக்கூடு!!

Sunday, October 23, 2011

உறவில்லா உறவுகள்!!!



நண்பகலில் நடந்த ஓர்
முரண்பட்ட ரகசியத்தின்
வெளிச்சமாய்
அன்றிரவு அந்த அறை
கோபங்களாலும் ஊடல்களாலும்
நிரம்பி வழிந்தது...

வாதங்களாலும் சலசலப்புகளாலும்
வெப்பமுற்றிருந்தது அவ்வறையின் இரவு

மறுநாள் திறந்த
சன்னற் கதவுகளில்
வெளியேறியது சூடான காற்று...
கூடவே கழிந்தது
முன்னிரவின்
வெக்கங் கெட்ட வார்த்தைகளும்
உண்டான ரணங்களும்....

மீண்டுமொருமுறை
வேகமாய் சாத்தப்பட்டது
சன்னற் கதவுகள்
பின்பு திறக்கப்படவேயில்லை
ஆகினும் சன்னல் இடுக்கின் வழியே
வார்த்தைகளும் சூடான காற்றும்
மெலிதாய் கசிந்து கொண்டேயிருந்தன
நசுங்கியபடி!!!!

Tuesday, August 30, 2011

கூட்டலும்(+) கழித்தலும் ( _ )



கூட்டலும் கழித்தலும்
இல்லாமல் ஏதுமில்லை
கணிதப் பாடமாகினும்
வாழ்க்கையாகினும்....

கூட்டலில் இருக்கப்பெறும்
இணக்கம் கழித்தல்
என்பதில் இல்லை....
அதிலும்
கடன் வாங்கி கழித்தல்
எவருக்கும்
விருப்பமற்றதாகிறது..

கணிதம் போலல்லாது
கொடுத்த கடனை
யாரும் கேட்காமல்
இருப்பதில்லை வாழ்க்கையில்!

சௌகரியங்களை கூட்டிக்
கொள்ளும் நாம் எதையும்
வேண்டாமென கழிப்பதில்லை
அப்படியே கழித்தாலும்
அதை வேறொருவர்
கூட்டிக் கொள்கிறார்..

கணிதத்தின் ஆதாரம்
கூட்டலும் கழித்தலுமே..
வாழ்க்கையின் ஆதாரம்
அத்தகையதே
ஜனனமும் மரணமுமாய்!!
கூட்டலும் கழித்தலும்
இல்லாமல் எதுவும் இல்லை
கணிதப் பாடமாகினும்
வாழ்க்கையாகினும்

Saturday, March 5, 2011

அதுவானது!!



பிறிதொருநாள் எதிர்பார்த்த
மழையானது
இன்றே தீவிரப்பட்டிருந்தது....
அது
முழுக்கக் கொட்டித்தீர்த்தது
ஓய்ந்து களைத்துப் போனது...

முன் வாசலில்
விரும்பி குளித்த
செவ்வந்தி மொட்டொன்றில்
வழிந்து கொண்டிருந்தது
மிகுதிப்பட்ட
நீரானது...

நீர்த் திவளைகள்
சிதறலாய் வரைந்திருந்தது
கண்ணாடி சன்னலில்

சுவை தேடும் எனது
நாவிற்கும் தேநீர்
கோப்பைக்கும் இடைப்பட்ட
தூரமானது
வெகுநிதானமாய் கடக்கப்பட்டது...

விலக்கி வைத்திருந்த
அவனது எண்ணங்களை
நேரமானது
மென்று கொண்டிருந்தது..

சன்னலின் வழியே
மௌனமாய் தீண்டிய
காற்றானது
அவனது முத்தம்தனை
ஞாபகப்படுத்திச் சென்றது..

அவன் மீதான கோபங்களின்
அடர்த்தி நீர்த்துப் போயிருந்தது...

லேசாகியிருந்தது
வானமானதும்
மனமானதும்...

நாளை
முன்வாசலின் செவ்வந்தி மொட்டு
விரிந்தபின் புன்னகைக்க கூடும்
மேசை மீதிருக்கும் இரு
தேநீர்
கோப்பைகளைக் கண்டு..

Thursday, December 23, 2010

சிலந்தி வீடு !!



வீட்டின் தெற்கு மூலையில்
ஓர் சிற்றெரும்பு அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது..

உற்று கவனிக்கையில்
பின்னப்பட்டிருந்த
சிலந்தி வலையில்
சிக்கிய அவ்வெறும்பு
மரித்திருந்தது..

அதன் மறுபுறத்தில்
ஓர் சிலந்தி தன் இருப்பை
இழைத்து கொண்டிருந்தது..
அப்போதே இழைக்கப்பட்ட
அதன் வலையின் மினுமினுப்பு
நெசவு நெய்தலை
ஒத்திருந்தது...

எட்டுக் கால்களில்
ஒவ்வொன்றையும்
விதம் விதமாய் அசைத்து
உள்ளும் புறமும் உந்தியது..
மெல்லிய இழையொன்றை
லாவகமாய் இழுத்தபடி
வேறொன்றில் இணைத்தது..

இப்படியாய்
பட்டா ஏதுமில்லாமல்
வெற்றிடத்தை ஆக்கிரமித்து
சுவற்றின் மூலையை
அகன்ற வலை ஒன்றால்
நிரப்பியது..

காற்றின் ஸ்பரிசத்தில்
மென்மையாய் மிதந்த
அம்மெல்லிய வலை
அறுந்து விட்டிருக்கவில்லை...

செங்கற்கள் மண்
அஸ்திவாரம் பூச்சுக்கள்
ஏதுமில்லாமல்
தன்னை மட்டும் கொண்டு
தரித்த அதன் இருப்பினை
ஏனோ கலைக்க இயலாமல்
விட்டுச் சென்றேன்..