Tuesday, August 24, 2010

தினமொரு ராஜகுமாரன்..!!



சன்னல் சட்டங்களை
பற்றியபடி
பதிந்த விரல்கள்..
சற்று மேல்
இரு புள்ளியாய்
சிறுத்த கண்கள்
எப்பொழுதும்
தென்படுகிறது
அவ்வீட்டினில்...

அக் கண்களின் ஏக்கங்கள்
வாடைக் காற்றை கிழித்து
நேர் கோடாய்
நிறுத்தப்படுகிறது
அவ்வீதியினில்...

நிரம்பப்பெறா
ஆசைகளைக் கொண்டு
நிரப்பியிருந்தது
அவள் வயது
நா வெட்டென...

கரு வனத்தினுள்
முளைத்த
வெண் கம்பிகளும்..
வலிகள் பிரசவித்த
கோடுகள் பதிந்த
முகமுமே
நிர்ணயித்தன
அவளது விலையை...

பரிகாரங்கள்
ஏதுமில்லா அவளது
கோவில் பிரவேசங்கள்
சாட்சியாயிருந்தன
செவ்வாய் தோஷமும்
இல்லையென..

பூச்சுகள் உதிர்ந்த
சுவர்களும்
கம்பிகளில் தொங்கும்
நிறம் மங்கிய கிழிசல்
ஆடைகளும்
ஒப்புக்கொண்டன
இயலாமை என்பதை...

ஆனந்த பைரவி
கல்யாணி ராகங்களில்
அரும்பிய காதல்களை
சஹானாவிலும்
முகாரியிலும்
தொலைத்திருந்தாள்..

எவர் பிடிக்கவில்லை
என்றாலும் அவள்
விசனப்பட போவதில்லை...

சன்னல் சட்டங்களுக்கு
அப்பால் செல்லும்
ஏதோ ஓர் ஆண்மகன்
அவளது
அன்றைய இரவின்
ராஜ குமாரனாய்
இருக்கப் பெறுகிறான்...

தற்காலிகமாய் அது
போதுமானதாகியிருந்தது
விதி எழுதிய
அவளது வலிகளை
அழிக்க...

எப்பொழுதாவது
அவ்வீதியின் வழியே
நீங்கள் போக நேரிடலாம்...

அவள் விடுத்த
கனவுகளும் ஆசைகளும்
வீதியில்தான் அலைகிறது..
அதன் வாசத்தை நீங்கள்
நுகர நேரிடலாம்...
அதன் மீது
மோதிட நேரிடலாம்...

அவ்வாறெனில்...
ஒரு கணம்
அச் சன்னலை
பார்த்துவிட்டுச்
செல்லுங்கள்...

அன்றிரவு
அவள் கனவின்
ராஜ குமாரன்
நீங்களாகவும்
இருக்கலாம்...!!!

Friday, July 30, 2010

தலைப்பற்ற கவிதையாய்...!!!


ஒற்றை தென்னை ..
அதனை வைத்திருக்கும்
சிறு நதி ஒன்று..
தனிமையில் உனக்காய் நான்..

சூரியன் வீசியெறிந்த
மஞ்சள் நிறம்
வானம் முழுதும்
சிதறுகிறது மென்மையாய்....

சொடுக்கெடுக்கும்
என் விரல்கள்
களைத்துப் போகின்றன...

கூடவே..
ஒற்றை தென்னையும்
அந் நதியும்
விசனப்படுகின்றன உன்னை
விசாரித்தபடியே ...

வர்ண கலவைகளில்
சேர்க்கப்படா
புது நிறமொன்றில்
தீட்டப்படுகின்றது
நிறமற்ற
நமது நாட்கள்...

உன் பார்வை என் மீது
வீசப்படுவது
தகிக்கின்ற வெப்பத்தினுள்
சில்லிடும் காற்று
புகுவது போன்றது..

புள்ளியினுள் பயணித்து
வரையப்படுகின்ற
கோலத்தினில்
விழுகிறது மழைத்துளி..
சலனப்பட்ட
என் மனம் போல்...

நதிக் கரையின்
கானங்களில் உன்
வாசம் படர்கிறது
அதனை....
அறிவித்தபடி காற்று
என் மீது நெடியதாய்
உனது வாசத்தை
படர்த்திவிட்டுச் செல்கிறது....

சிவக்கின்றேன் நான்...
சில்லிட்டுக் கொண்டிருந்தது
இத் தருணம்...

யாதொரு பெயருமிடாமல்
நீள்கிறது நம் உறவு...

Tuesday, July 20, 2010

பிரிந்துவிட்டிருந்த நீ....



விழி மூடும் தருணங்களில்
பிரபஞ்சத்தை நோக்கி
பயணிக்கறேன் உன்னை
தேடுதலின் பொருட்டு

காகம் குருவிகளிலும்
பறக்கும் பட்டாம் பூச்சியினுளும்
ஊரும் புழுக்களிலும்
தேடுகிறேன் உன்னை...

மலர்ந்த பூ
விரியா மொட்டுக்கள்
பட்ட மரம் என
எவற்றிலும்
தேடுகிறேன் உன்னை..

நீலம் போர்த்திய
கடலின் பேரமைதி
உணர்த்தியது நீ
அங்கு இல்லை என..

வெண்பஞ்சு பதிந்த
மேகத்திலும் அலைகிறேன்
கிரகங்கள் ஒன்பதும் நீ
இல்லையென பிதுக்கியன

உன் உருவத்தை
ஆட்கொண்ட அக்னியிடம்
வினவுகிறேன்..
அருவமான உன்னை
நிரப்பிய வெற்றிடத்தையும்
விசாரிக்கறேன்..

சிப்பிகள் விடுத்த
சப்தத்தினை ஒத்த
உன் சிரிப்பின்
ஒலிகளும்...
நீ
உச்சரித்த வார்த்தைகளும்
கலந்த காற்றிலும்
விசாரிக்கறேன்...

விழி திறந்து பார்க்கிறேன்..

எதுவாகவும் நீ இல்லை..
அப்படி எனில்
நீ என்பது எங்கே?

Thursday, July 15, 2010

கனவின் புதிர்..!!




கூரியதாய் நீல விழிகள்
விரிந்த நீள் மயிர்கற்றைகள்
இரு மூங்கில் மர உயரமென

கரிய நிறத்தில்
ஐந்து கைகள் கொண்ட
பிரமாண்டமான ஜந்து
ஒன்று என் கனாவில்
இம்சித்தது சமீப காலமாய்..

நான் போகுமிடமெல்லாம்
துரத்துகிறது...

நான் ஒளிய எத்தனிக்கையில்
விரல்களி னிடுக்கிலிருந்து
அடர் திரவ மொன்றை
பீய்ச்சியது என் மேல்...
அதன் வேகத்தில்
தூக்கி எறியப்படுகிறேன்...

விருட்சமாய் வளர்ந்து
என்னை ஆக்கிரமிக்கிறது..
அதன் பிடியிலிருந்து
மீள முடியாமல் கதறுகிறேன்...

திடுக்கிட்டு விழிக்கிறேன்
கனவின் தாக்கத்திலிருந்து

கணவன்
என்றோ பார்த்த படத்தின்
வெளிப்பாடு எனவும்

அலுவலகத் தோழிகள்
அச்சத்தின் வடிவம் எனவும்

அம்மா
கோவிலுக்கு சென்று வா
எனவும்

விதவிதமான விளக்கங்கள்
யோசனைகள்
பெறப்பட்டது...

என் இரு வயது பிள்ளையின்
புன்னகை நிம்மதியை
மீட்டும் என
கொஞ்சி மகிழ அது
விலகிச் செல்கிறது
விருப்பமில்லாமல்...

நான் யாரென
என் பிள்ளையிடம்
அடையாளப் படுத்தப்படுகிறது
மாத விலை கொடுத்து
கொணரப்பட்ட
வளர்ப்புத் தாயினால்..

விழுங்கிய உணவு
இரைப்பையை
தின்பது போல்
உணரப்படுகிறேன்...

இனி....
ஏதும் இடையூரற்ற முழு
பொழுதுகளை என்
குழந்தை கொண்டு
நிரப்புகிறேன் ..

அவள் இயக்கும்
பொம்மையாய்
உருப் பெற்றிருக்கிறேன்..


இப்பொழுதெல்லாம்
நீல விழிகள் விரித்த மயிர்
கொண்ட ஜந்து என்
கனவில் வருவதில்லை...

Wednesday, July 7, 2010

மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!


பிரிவதற்காய் ஒதுக்கப்பட்ட
மாலை நேரம் அது
எதிர் நோக்கப்பட்டது
நம்மிருவராலும்...

செந்நிற பொழுதினில்
நீயும் நானும்
கூடி முடிவெடுத்தோம்
பிரிந்துவிடுவதென...

பேசுவதற்கென ஆரம்பிக்கும்
பெரும் நேரங்கள்
பிரிவுகளிலேயே
முடிவுறுகின்றன...

காதல் பார்வைகள்
உள்ளங்கை ஸ்பரிசங்கள்
ரகசிய முத்தங்கள்
என எதுவும்
பரிமாறப்படுவதற்கில்லை...

குறுஞ்செய்திகள்
அகால அழைப்புகள்
இனி இல்லை என
இருவர் எண்களும்
அழிக்கப்படுகின்றன
அவரவர் அலைபேசியில்...

எப்பொழுதும் பார்க்கக் கூடாதென
முடிவும் செய்தாகிவிட்டது..

உன்னை... நம் காதலை
மறந்தாகவே வேண்டுமாய்
ஒவ்வொரு நொடியையும்
துரத்துகிறேன்...

உனக்கு பிடித்தமானதை
பார்க்க நேரிடாது
கவனமாய் இருக்கிறேன்..

உனை மறத்தல் என்பது
அப்படியொன்றும்
அவஸ்தை இல்லை என
வெளிக்காட்டிக் கொள்கிறேன்...

உனது மிக பிடித்தமான
ஓய்ந்த பெருமழை
தெளிந்த வானம்
துடைத்த சாலை
சிலிர்த்த அரும்புகள்
ஒற்றையடி பாதை
என் கனவுகளில் தினந்தோறும்
ஓடியாடுகின்றன...
அவற்றை துரத்துகையில்
என்னை பழிக்கின்றன..

தூக்கம் தொலைந்த ஓர் இரவில்
அழித்துவிட்டிருந்த உனது
அலைபேசி எண்களை
சேகரிக்க முயன்று
தோற்று போன வேளையில்
உன் அழைப்பு முந்திவிட்டிருந்தது..

கண்களில் துளிர்த்த துளிகள்
மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!
முற்று பெற்றிருந்தது ஒரு மௌன யுத்தம்..

Friday, July 2, 2010

வெறுமையினுள்,,,!!



மழைத் துளி கனத்த
ஓர் நாள்தான் நான்
வெறுமையை உணர்ந்தேன்..

சிறுவர்களின் சப்தங்கள்
வாகன இரைச்சல்கள்
அண்டை வீட்டாரின்
சண்டைகள்
என ஏதுமில்லா
வெறுமையினுள் புகுந்துள்ளேன்...

தினசரிகள் தீண்டப்படவில்லை
நாளிதழ்கள் புரட்டப்படவில்லை..
வீட்டினுள் ஏதும்
கலைக்கப்படவில்லை..
மனம் மட்டும் நிதமும்
துவைத்து பிழியப்படுகிறது...

காற்றினுள் வெறுமை
கூடியிருப்பதை
சுவாசத்தில் உணர்கிறேன்..
அது நுரையீரலையும்
அடைத்து நிரப்புகிறது....

மழைகளின் விசாரிப்புகள்
பேரிரைச்சலாய் உரைத்தது..

பாதை ஏதுமற்ற
காட்டினில் அலைகிறேன்..
தடுமாறுகிறேன்..விழுகிறேன்..
எதை தேடுகிறேன் எனவும்
மறந்து விடுகிறேன்....

சுருதி சேரா ராகத்தினை
மீட்டுவது போலிருந்தது
நான் தனிமையில்
உண்பதும்..உறங்குவதும்...

கடுங் குளிரில்
விடப்படும் மூச்சுக் காற்று
போதுமானதாகியிருந்தது..
கதகதப்பிற்கு..

இன்னும் பெய்து கொண்டுதான்
இருக்கிறது மழை.!!!

Monday, June 21, 2010

நிகழ்வு..!!



தற்சமயமே நிகழ்ந்திருக்ககூடும்
அந் நிகழ்வு..

பால்காரனின் கிண்கிணி
சப்தத்தின் போதோ..

வெண்ணைய்காரியின்
கூவலின்போதோ..

சளக் சளக் கென ஓர்பெண்
வாசல் தெளிக்கும்போதோ..

யாரோ ஒருவர்
அன்றைய நாளிதழின்
வாசம் நுகர்ந்த போதோ..

இருசக்கர வாகனமொன்று
வேகமென கடந்த போதோ..

ஆனால் வெகு தற்சமயமே
நிகழ்ந்திருக்ககூடும்...

அசைவு அடங்கிய
பட்டாம் பூச்சியின்
ஸ்பரிசம் பெற்றிருந்தது
நடுச் சாலையொன்று!!