Tuesday, April 20, 2010

காற்றாகிய நான் .




தனிமை சுவாசத்தை
விரும்பி சுவைக்கும் நீ
வலிய வெதும்புகிறாய்
இழந்த ஒற்றை சிறகிற்காய்
திசை தெரியா பறவையின்
உணர்தலுக்கு நிகர்போல்..

கிழித்தெறியப்பட்ட முகமூடியின்
துணுக்குகளில் ஒட்டியிருக்கும்
நச்சினால் நிறமிழந்தபடியே
காற்றாகிய நான்
இருள் அப்பியிருந்த
உன் அறையினுள்
தூசி படர்ந்த ஒளியாய்
நுழைகிறேன் மெல்ல...

எப்பொழுதும் போல் அப்பொழுதும்
அதே பார்வையில் நிதர்சனமாய்
வீசப்படுகிறேன் உன் மேல்...

Friday, April 16, 2010

முரண்



நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை

விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த...

அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய்..

தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய்...

மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும்....

காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும்....

திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...

கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன...

Tuesday, March 30, 2010

மௌனமென்னும் ப்ராய்ச்சித்தம்



ஓயாது பேசிய சொற்கள்
ஓய்வெடுக்கின்றன
அவளிடம்...

பூ விற்பவளிடமும்
காய்கறிகாரனிடமும்
சண்டையிட
தோன்றுவதில்லை
அவளுக்கு..

இப்பொழுதெல்லாம்
மௌனம்
தேவை எனப் படுகிறது
அவளுக்கு...

கதவின் அழைப்பு மணி
ஒலிக்க நேர்கையில்
அவனாக இருக்க வேண்டுமென
அடம் பிடிக்கிறது
அவள் மனம்..
ஏமாற்றத்திலேயே
முடிவடைகிறது ஒவ்வொரு
கதவு திறப்பின் போதும்...

அவனுள்
நெருஞ்சி முள்ளாய்
நெருடி இருக்கக் கூடும்
அவளது கூர் சொற்கள்

உஷ்ண வார்த்தைகளை
உதிர்த்த பின்தான்
உணர்கிறாள் அவனது
காயத்தின் ஆழத்தை..


சில காயங்களை ஆறவிட
மௌனம் எனும் மருந்து
தேவைப் பட்டே ஆகிறது..
தவற்றிற்கு தேடும்
பிராய்ச்சித்தம் போல்..


Friday, March 26, 2010

உனது நட்பின் விளிம்பில்.....



நமது நெடுந்தூர
பயணத்தின் போது
விடுபட்ட வார்த்தைகளை
மிச்சமிருந்த சிநேகங்களை

ஒற்றை வரியில்
ஒரு நிலா பொழுதில்
அலைபேசியில்
அனுப்பி வைத்தாய்...
"ஐ மிஸ் யு" என...

உனக்கான காதலை
அழகாய்தான் புரிய வைத்தாய்
குறுந்தகவலில்...

உன் அடுத்த அழைப்பில்
என்ன பேசுவது என
தெரியாமல் நான்
வெக்கப்பட்டுக் கொண்டிருந்த
சமயம்...

உனது அழைப்பு
கண் சிமிட்டியது என்
அலைபேசியில்...

Wednesday, March 24, 2010

பகல் கனவுகள்..!!!



கரை படிந்த பற்களினூடே
வெறுமையுடன் சிரித்து
வியர்வையில் கண்ணீரும்
கலந்து வெளியேற
வெறும் பாதம் தேய
வீதியில் கூவி பழங்களை
விற்கிறான் அவன்

வட்டிகளை அடைத்திடனும்
சிறு வீடொன்று கட்டிடனுமென
கனவுகள் நிறைய அவன்
கண்களில் தெரிய
நடத்துகிறான் நாட்களை....

பட்டிணத்தில் படிக்கும் மகன்
மன சுமையை இறக்குவானென
தலையில் சுமையை
தாங்கியபடி கூவி
கொண்டே செல்கிறான் அவன்...

தந்தையின் கனவறியா மகன்
தறி கெட்டு செல்லும் பாதைக்கு
வழி கேட்டு செல்கிறான்..
மது மாது போதையில் தந்தைதன்
உணர்வுகளை எரிக்கிறான்..

தந்தையின் கனவுகளை
வீதியில் விற்கிறான்...
விடை தெரியா கனவுகள்
விடை பெற்றுக் கொள்கிறது
மெல்ல மெல்ல.....

Tuesday, March 9, 2010

ஒற்றை காட்டுப் பூ !!!




சிறு ஓடையின்
சல சல வென
ஓட்டத்தில்
மென்மையடைந்த
கூழாங்கற்கள்
ஓடையுடன் இசைந்து
தாளமிட....

பட படவென
பறந்த பறவைகள்
விட்டுச் சென்ற
சிறகுகள்
காற்றில் நடனமாட

குட்டி ஒன்றை
தொலைத்த மானொன்று
திரிந்தாட...

இரவு பகல் பார்த்தறியா
ஊர்ந்து வரும் ஜந்துக்கள்...

வேட்டை முடிந்து
இளைப்பாறும் மிருகங்கள்.....
மீதமான சதைகளை
நோட்டமிடும் வல்லூறுகள்...

இரவினில் அலறும்
ஆந்தை கூட்டமொன்று
திகிலை பரப்பியது...

நிலவின் கரிசனம்
காய்ந்த சிறகுகளின் மீதும்
பட்டு ஜொலித்தது..
மரங்களின் சண்டைகளில்
பற்றி எரிந்தது காடு...

இத்தனை ஆரவாரங்களிலும்
மயான அமைதிகளிலும்
ஓசை இல்லாமல் பூத்த
ஒற்றை பூ காட்டினையே
மணக்கச் செய்ததாம்!!!

Wednesday, February 17, 2010

வீரியம் யாதென....



உனது கடின வார்த்தை
பிரயோகித்தலில்
நீரினுள் அமிழ்த்தப்படும்
பொருளினால் மேலெழும்பும்
நீர்குமிழ் போல்
உனக்கான பதிலடிகள்
எழுந்தமர்கின்றன.....

மறுநொடியில் எதிர்வரும்
பின்விளைவுகளை
பிரித்தாராய்ந்து சிறு
புன்னகை உதிர்க்க
எத்தனிக்கையில்
அதுவும் உன்னை
ஆத்திரப்படுத்தும் என
யோசித்தேன்....

உனது நோக்கம் என்னை
காயப்படுத்துதலேயன்றி
காரணிகளை
நியாயப்படுதுதல் அல்ல
என அறிந்து
ஒரு கண்ணீர்துளியை
விட்டுச் சென்றேன் ...

அது உன்னை
திருப்தி படுத்தகூடும்...
உன் உதட்டோர
குறுநகையை
வரவழைக்க கூடும்...

(எனது கவிதை வெளியிட்டமைக்கு நன்றி -அக நாழிகை)