ஏழு மலை ஏழு கடல் தாண்டும்
கதையினைப் போலவே
ஓர் அதிசய அற்புத அல்லியை கொணர
முற்பட்டாள் சிறு தேவதை
அவள் பெயர் அழகி!
முதன் முயற்சியாய் ஆதவன் வருமுன்
ஒரு பூவனத்தில் மலரினும்
மெல்லிய காம்பினை தொடுத்து
நிலவில் கொக்கி போட்டு
அதனைப் பிடித்தபடி ஏறிச்சென்றாள்
வானுலகிள் அவ்வழகி!
அடர்ந்த மழை நடுவில்
மேகத்தினை தொடாமல் புழுவை போல்
ஊர்ந்து நெளிந்து
ஊதா நிற நீர்க் கம்பியை
கண்டுபிடித்தாள்
மழையோடு மழையாக
ஊதா கம்பியை பிடித்து ஓர்
பால் நிற கடலினை அடைந்தாள்
உடலெல்லாம் மீனாகி
நீந்தி கரையை அடைந்த பொழுது
ஒரு யுகம் கடந்தாள்...
கரையின் மேல் அரும்பியிருந்த
ஓர் பெரு வனத்தினுள் உட்சென்று
ஓய்வு எடுக்கும் புள்ளி மானிடம்
அதிசய அற்புத அல்லியொன்று எங்கென
வினவும் நேரமொன்றில்
அவளை விழுங்க ஆயுத்தமானது
ராட்சத சர்ப்பம் ஒன்று...
விருட்டென புள்ளி மானின் கொம்பை
கெட்டியாக பிடித்து
அவள் ஓட
அச்சத்தில் அம்மான் அவளையும் சுமந்தபடி
பறந்து பெரும் புதருக்குள் மறைந்தது- பின்
கோபமுற்ற அம்மான் அச் சிறு
அழகியை கொம்பால் தூக்கி வீசியது
ஓர் ஆழ்பள்ளத்தில்
அந்
நீண்ட பள்ளத்தாக்கில்
விழத் தொடங்கினாள் அழகி
கதறிக் கொண்டே அவள் நிலம் சேர்கையில்
அவள் ஆரம்பித்த
பூவனத்திலேயே மீண்டும்
வீழ்ந்திருப்பதைக் கண்டதிர்ந்தாள்...
தேம்பியபடியே நடக்கக் தொடங்குகையில்
கால் இடறி மண்ணில் விழுந்தாள்
பூச் செடிகளின் நடுவே
அவள் கால் தடம் பதிந்த அந்த
அற்புத அதிசய அல்லி
மலர்ந்திருந்தது..
அவள் புன்னகைத்தபடி அதை பறிக்கும் முன்
அயர்ந்த களைப்பால் சிறு இமைகளை மூடி
உறங்கிப் போனாள்..
அவள் கனவினுள்
பிரபஞ்சம் முழுவதும் அல்லிப் பூ
பூத்திருந்தது!!!