Tuesday, January 27, 2015

காதல் மரங்கள்!!



என் ஆழ் மனதினுள்
ஆழ்ந்திருக்கும்
உன் மீதான என் காதலை
மிகச் சிறியதே ஆன ஒரு
கண்ணாடிக் குடுவையினுள்
அடைத்து விட்டிருக்கிறேன்..!!

என்றாவது ஓர் நாள் அது
திறக்கப்படும் சமயத்தில்
குபீரென விஸ்தரித்து
அண்டத்தினுள் அடக்க
முடியா பிம்பமாய்
மிளிரக் கூடும்!!

இருப்பினும்
அடைப்பட்டே கிடக்கிறது
என் மனதினுள்!

சிறு தேடுதலில்....
கண்ணற்றவனின் கைகளில்
கண்ணாடிச் சில்லுகளிடையே
அகப்படும் ரோஜாவின்
மென்மை போல்
கிடைக்கப்பெற்றது
உனது நட்பு.!!

எனது நெடுந்
தோல்வியின் தடயங்களை
உன் மென்கைகள் கொண்டு
அழித்தாய் நிதானமாக..

அழும் சமயங்களில்
கண்ணீர் சுரப்பிகளில்
இனிய பானம் கலந்திட்டாய்

எனக்கான திசையை நோக்கி
உன் விரல் பற்றி
நடக்கச் சொன்னாய்..

நானும் நடக்கலானேன்
காதல் விதைகளை
தூவியபடியே...

சற்று இளைப்பாறி
திரும்பிப் பார்க்கிறேன்
வழி நெடுகிலும்
காதல் மரங்கள்!!

இன்று மலர்ந்த
மலரினுள் தங்கிய
பனித்துளி போல்
அத்தனை அழகானது
என் காதல்..!!

எதையும் விவரிக்க
இயலா கணங்களுடனே
அமைந்து விடுகிறது
உன்னுடன் இருக்கும் நேரங்கள்!!

உன் ஒவ்வொரு
சந்திப்பிற்கு பின்
என் மனம் சொல்கிறது
கண்ணாடிக் குடுவை
கனத்துக் கொண்டே
செல்கிறதென....

Wednesday, December 12, 2012

[Window Title]


DW WLAN Card Wireless Network Controller



[Main Instruction]

DW WLAN Card Wireless Network Controller has stopped working



[Content]

Windows is checking for a solution to the problem...



[Cancel]

Tuesday, July 17, 2012

அகம் !!



மீண்டும் மீண்டும்
ஒரு நாடகத்தை அரங்கேற்ற
வேண்டியதாகிறது
அடித்த வலிகளும் ரணங்களும்
வடியும் முன்னே
மனதி லொழுகும்
உதிரத்தை துடைத்துக் கொண்டு
ஆணாதிக்கத்தின் முன்
மண்டியிட்டபடியே
புன்னகைத்து
அப்பொழுதே மறந்துவிட்டதாய்
நடிக்கிறேன்!!

Sunday, June 24, 2012

அழகியும் அதிசய அற்புத அல்லியும்!!








ஏழு மலை ஏழு கடல் தாண்டும்
கதையினைப் போலவே
ஓர் அதிசய அற்புத அல்லியை கொணர
முற்பட்டாள் சிறு தேவதை
அவள் பெயர் அழகி!

முதன் முயற்சியாய் ஆதவன் வருமுன்
ஒரு பூவனத்தில் மலரினும்
மெல்லிய காம்பினை தொடுத்து
நிலவில் கொக்கி போட்டு
அதனைப் பிடித்தபடி ஏறிச்சென்றாள்
வானுலகிள் அவ்வழகி!

அடர்ந்த மழை நடுவில்
மேகத்தினை தொடாமல் புழுவை போல்
ஊர்ந்து நெளிந்து
ஊதா நிற நீர்க் கம்பியை
கண்டுபிடித்தாள்

மழையோடு மழையாக
ஊதா கம்பியை பிடித்து ஓர்
பால் நிற கடலினை அடைந்தாள்
உடலெல்லாம் மீனாகி
நீந்தி கரையை அடைந்த பொழுது
ஒரு யுகம் கடந்தாள்...

கரையின் மேல் அரும்பியிருந்த
ஓர் பெரு வனத்தினுள் உட்சென்று
ஓய்வு எடுக்கும் புள்ளி மானிடம்
அதிசய அற்புத அல்லியொன்று எங்கென
வினவும் நேரமொன்றில்
அவளை விழுங்க ஆயுத்தமானது
ராட்சத சர்ப்பம் ஒன்று...

விருட்டென புள்ளி மானின் கொம்பை
கெட்டியாக பிடித்து
அவள் ஓட
அச்சத்தில் அம்மான் அவளையும் சுமந்தபடி
பறந்து பெரும் புதருக்குள் மறைந்தது- பின்
கோபமுற்ற அம்மான் அச் சிறு
அழகியை கொம்பால் தூக்கி வீசியது
ஓர் ஆழ்பள்ளத்தில்
அந்நீண்ட பள்ளத்தாக்கில்
விழத் தொடங்கினாள் அழகி
கதறிக் கொண்டே அவள் நிலம் சேர்கையில்
அவள் ஆரம்பித்த
பூவனத்திலேயே மீண்டும்
வீழ்ந்திருப்பதைக் கண்டதிர்ந்தாள்...

தேம்பியபடியே நடக்கக் தொடங்குகையில்
கால் இடறி மண்ணில் விழுந்தாள்
பூச் செடிகளின் நடுவே
அவள் கால் தடம் பதிந்த அந்த
அற்புத அதிசய அல்லி
மலர்ந்திருந்தது..

அவள் புன்னகைத்தபடி அதை பறிக்கும் முன்
அயர்ந்த களைப்பால் சிறு இமைகளை மூடி
உறங்கிப் போனாள்..
அவள் கனவினுள்
பிரபஞ்சம் முழுவதும் அல்லிப் பூ
பூத்திருந்தது!!!

நியதி.!!!



ஓர் ஜனனம் அதன் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருக்கும்!

ஓர் மரணம் அதன் விண்மீன்
விழுந்து கொண்டேயிருக்கும்!

ஓர் காதல் அதன் கைகள்
பிணைந்து கொண்டேயிருக்கும்!

ஓர் காமம் அதன் ஜுவாலை
எரிந்து கொண்டேயிருக்கும்!

ஓர் விதை அதன் மரம்
சுமந்து கொண்டேயிருக்கும்!

ஓர் வனம் அதன் கருமை
படர்ந்துகொண்டேயிருக்கும்!

ஓர் மனிதன் அவன் மனிதம்
மரித்துக் கொண்டேயிருக்கும்!

ஓர் உலகம் அதன் உருவம்
அழிந்து கொண்டேயிருக்கும்!!!!

Saturday, June 23, 2012

தீண்டா பொழுதுகள் !!







சில பொழுதுகள்
தனிமைப் படுத்தப்படுகின்றன.

செய்திகள் பகிரப்படாமல்
துக்கங்கள் நிகழப்படாமல்
மிக நெருக்கமானவர்களின் வருகையின்றி
எவ்வித விசாரிப்புகளின்றி
வெற்றிடமாய்
தீண்டாமலே கிடக்கின்றன..

எவ் வித சஞ்சலமும் சலசலப்பும்
தாரா நாட்கள் சௌகரியம்.

மகிழ்ச்சியின் சோகத்தின் தருணங்களை
நினைவு கூர்வதை போல
ஏதும் நிகழா பொழுதுகளை
எவரும் நினைக்க நினைப்பதில்லை..

Wednesday, June 20, 2012

ஊடல் எனும் மையப்புள்ளி !!


விருப்பு வெறுப்பு என்ற
விளிம்புகளற்ற நம் வாழ்க்கை பாதையில்
ஏதோ ஓர் மையப் புள்ளியில்தான்
நம் ஊடலை இனிதே தொடங்கினோம்..

சுவற்றில் எம்பி விழும் பந்தைப் போன்றே
எதிரெதிர் சொற்களால் தெறித்து
தூர விழுகிறோம்..

திரும்பி வர தயங்கியபின்
கூடலில்லா ஊடலுடன்
எனக்கான பாதையில் நான்!
உனக்கான பாதையில் நீ!

ஏதோ ஓர் விசையின் உந்துதலில்
நின்றபின் உனக்கும் எனக்குமிடையேயான
தூரம் மலைக்க வைத்தது..

எங்கோ தூரத்தில் ஆரம்பித்த
ஊடலின் மையப்புள்ளி
வெறும் காற்றும் புகா சிற்சிறு புள்ளியே
என உணரும் தருணத்தில்
வாழ்வின் மீதிகள்
காத்திருப்பதில்லை அல்லது
மிச்சமிருப்பதில்லை..!!