
என் ஆழ் மனதினுள்
ஆழ்ந்திருக்கும்
உன் மீதான என் காதலை
மிகச் சிறியதே ஆன ஒரு
கண்ணாடிக் குடுவையினுள்
அடைத்து விட்டிருக்கிறேன்..!!
என்றாவது ஓர் நாள் அது
திறக்கப்படும் சமயத்தில்
குபீரென விஸ்தரித்து
அண்டத்தினுள் அடக்க
முடியா பிம்பமாய்
மிளிரக் கூடும்!!
இருப்பினும்
அடைப்பட்டே கிடக்கிறது
என் மனதினுள்!
சிறு தேடுதலில்....
கண்ணற்றவனின் கைகளில்
கண்ணாடிச் சில்லுகளிடையே
அகப்படும் ரோஜாவின்
மென்மை போல்
கிடைக்கப்பெற்றது
உனது நட்பு.!!
எனது நெடுந்
தோல்வியின் தடயங்களை
உன் மென்கைகள் கொண்டு
அழித்தாய் நிதானமாக..
அழும் சமயங்களில்
கண்ணீர் சுரப்பிகளில்
இனிய பானம் கலந்திட்டாய்
எனக்கான திசையை நோக்கி
உன் விரல் பற்றி
நடக்கச் சொன்னாய்..
நானும் நடக்கலானேன்
காதல் விதைகளை
தூவியபடியே...
சற்று இளைப்பாறி
திரும்பிப் பார்க்கிறேன்
வழி நெடுகிலும்
காதல் மரங்கள்!!
இன்று மலர்ந்த
மலரினுள் தங்கிய
பனித்துளி போல்
அத்தனை அழகானது
என் காதல்..!!
எதையும் விவரிக்க
இயலா கணங்களுடனே
அமைந்து விடுகிறது
உன்னுடன் இருக்கும் நேரங்கள்!!
உன் ஒவ்வொரு
சந்திப்பிற்கு பின்
என் மனம் சொல்கிறது
கண்ணாடிக் குடுவை
கனத்துக் கொண்டே
செல்கிறதென....



