
பிரிவதற்காய் ஒதுக்கப்பட்ட
மாலை நேரம் அது
எதிர் நோக்கப்பட்டது
நம்மிருவராலும்...
செந்நிற பொழுதினில்
நீயும் நானும்
கூடி முடிவெடுத்தோம்
பிரிந்துவிடுவதென...
பேசுவதற்கென ஆரம்பிக்கும்
பெரும் நேரங்கள்
பிரிவுகளிலேயே
முடிவுறுகின்றன...
காதல் பார்வைகள்
உள்ளங்கை ஸ்பரிசங்கள்
ரகசிய முத்தங்கள்
என எதுவும்
பரிமாறப்படுவதற்கில்லை...
குறுஞ்செய்திகள்
அகால அழைப்புகள்
இனி இல்லை என
இருவர் எண்களும்
அழிக்கப்படுகின்றன
அவரவர் அலைபேசியில்...
எப்பொழுதும் பார்க்கக் கூடாதென
முடிவும் செய்தாகிவிட்டது..
உன்னை... நம் காதலை
மறந்தாகவே வேண்டுமாய்
ஒவ்வொரு நொடியையும்
துரத்துகிறேன்...
உனக்கு பிடித்தமானதை
பார்க்க நேரிடாது
கவனமாய் இருக்கிறேன்..
உனை மறத்தல் என்பது
அப்படியொன்றும்
அவஸ்தை இல்லை என
வெளிக்காட்டிக் கொள்கிறேன்...
உனது மிக பிடித்தமான
ஓய்ந்த பெருமழை
தெளிந்த வானம்
துடைத்த சாலை
சிலிர்த்த அரும்புகள்
ஒற்றையடி பாதை
என் கனவுகளில் தினந்தோறும்
ஓடியாடுகின்றன...
அவற்றை துரத்துகையில்
என்னை பழிக்கின்றன..
தூக்கம் தொலைந்த ஓர் இரவில்
அழித்துவிட்டிருந்த உனது
அலைபேசி எண்களை
சேகரிக்க முயன்று
தோற்று போன வேளையில்
உன் அழைப்பு முந்திவிட்டிருந்தது..
கண்களில் துளிர்த்த துளிகள்
மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!
முற்று பெற்றிருந்தது ஒரு மௌன யுத்தம்..



