Wednesday, July 7, 2010

மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!


பிரிவதற்காய் ஒதுக்கப்பட்ட
மாலை நேரம் அது
எதிர் நோக்கப்பட்டது
நம்மிருவராலும்...

செந்நிற பொழுதினில்
நீயும் நானும்
கூடி முடிவெடுத்தோம்
பிரிந்துவிடுவதென...

பேசுவதற்கென ஆரம்பிக்கும்
பெரும் நேரங்கள்
பிரிவுகளிலேயே
முடிவுறுகின்றன...

காதல் பார்வைகள்
உள்ளங்கை ஸ்பரிசங்கள்
ரகசிய முத்தங்கள்
என எதுவும்
பரிமாறப்படுவதற்கில்லை...

குறுஞ்செய்திகள்
அகால அழைப்புகள்
இனி இல்லை என
இருவர் எண்களும்
அழிக்கப்படுகின்றன
அவரவர் அலைபேசியில்...

எப்பொழுதும் பார்க்கக் கூடாதென
முடிவும் செய்தாகிவிட்டது..

உன்னை... நம் காதலை
மறந்தாகவே வேண்டுமாய்
ஒவ்வொரு நொடியையும்
துரத்துகிறேன்...

உனக்கு பிடித்தமானதை
பார்க்க நேரிடாது
கவனமாய் இருக்கிறேன்..

உனை மறத்தல் என்பது
அப்படியொன்றும்
அவஸ்தை இல்லை என
வெளிக்காட்டிக் கொள்கிறேன்...

உனது மிக பிடித்தமான
ஓய்ந்த பெருமழை
தெளிந்த வானம்
துடைத்த சாலை
சிலிர்த்த அரும்புகள்
ஒற்றையடி பாதை
என் கனவுகளில் தினந்தோறும்
ஓடியாடுகின்றன...
அவற்றை துரத்துகையில்
என்னை பழிக்கின்றன..

தூக்கம் தொலைந்த ஓர் இரவில்
அழித்துவிட்டிருந்த உனது
அலைபேசி எண்களை
சேகரிக்க முயன்று
தோற்று போன வேளையில்
உன் அழைப்பு முந்திவிட்டிருந்தது..

கண்களில் துளிர்த்த துளிகள்
மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!
முற்று பெற்றிருந்தது ஒரு மௌன யுத்தம்..

Friday, July 2, 2010

வெறுமையினுள்,,,!!



மழைத் துளி கனத்த
ஓர் நாள்தான் நான்
வெறுமையை உணர்ந்தேன்..

சிறுவர்களின் சப்தங்கள்
வாகன இரைச்சல்கள்
அண்டை வீட்டாரின்
சண்டைகள்
என ஏதுமில்லா
வெறுமையினுள் புகுந்துள்ளேன்...

தினசரிகள் தீண்டப்படவில்லை
நாளிதழ்கள் புரட்டப்படவில்லை..
வீட்டினுள் ஏதும்
கலைக்கப்படவில்லை..
மனம் மட்டும் நிதமும்
துவைத்து பிழியப்படுகிறது...

காற்றினுள் வெறுமை
கூடியிருப்பதை
சுவாசத்தில் உணர்கிறேன்..
அது நுரையீரலையும்
அடைத்து நிரப்புகிறது....

மழைகளின் விசாரிப்புகள்
பேரிரைச்சலாய் உரைத்தது..

பாதை ஏதுமற்ற
காட்டினில் அலைகிறேன்..
தடுமாறுகிறேன்..விழுகிறேன்..
எதை தேடுகிறேன் எனவும்
மறந்து விடுகிறேன்....

சுருதி சேரா ராகத்தினை
மீட்டுவது போலிருந்தது
நான் தனிமையில்
உண்பதும்..உறங்குவதும்...

கடுங் குளிரில்
விடப்படும் மூச்சுக் காற்று
போதுமானதாகியிருந்தது..
கதகதப்பிற்கு..

இன்னும் பெய்து கொண்டுதான்
இருக்கிறது மழை.!!!

Monday, June 21, 2010

நிகழ்வு..!!



தற்சமயமே நிகழ்ந்திருக்ககூடும்
அந் நிகழ்வு..

பால்காரனின் கிண்கிணி
சப்தத்தின் போதோ..

வெண்ணைய்காரியின்
கூவலின்போதோ..

சளக் சளக் கென ஓர்பெண்
வாசல் தெளிக்கும்போதோ..

யாரோ ஒருவர்
அன்றைய நாளிதழின்
வாசம் நுகர்ந்த போதோ..

இருசக்கர வாகனமொன்று
வேகமென கடந்த போதோ..

ஆனால் வெகு தற்சமயமே
நிகழ்ந்திருக்ககூடும்...

அசைவு அடங்கிய
பட்டாம் பூச்சியின்
ஸ்பரிசம் பெற்றிருந்தது
நடுச் சாலையொன்று!!

Monday, June 7, 2010

இயல்புக்கு பின்....!!!!




தீபாவளி நேரம்.....
தீபங்களின் மின்மினிகள்
வெடிச் சத்தங்கள்
வான வேடிக்கைகள்
இவை யாவுமே
பாதிக்கவில்லை
அவ் வகதி முகாமில்...

அங்கே சிறுமி ஒருத்தி
அகதியாய்-அவள் வயது
எட்டு இருக்கும்....
சிதறா சிந்தனையில்
வெறித்து நோக்கினாள்
கடலினை நோக்கி....

அவள் அருகில் சென்றேன்..
"பட்டாசு வெடிக்கலையா?"
என்னை ஒரு கணம்
உற்று நோக்கி
மீண்டும் வெறித்தாள்
கடலை நோக்கி.....
"பிடிக்கவில்லையா"??
இல்லை என்று
தலை ஆட்டினாள்..

அவள் சூழ்நிலை
மாற்ற விரும்பினேன்...
"கண்ணாமூச்சி ஆடலாமா?"
வாய் திறந்தாள்...
"அப்படி எண்டால் என்ன?"
"நீ ஒளிந்து கொள்...
நான் தேடுகிறேன்"-என்றேன்
"இதைத்தான் எங்களது ஊரில்
நிதமும் செய்யறம்"

சுருக் கென்றது
சுடு சொல் வதைத்தது..

பின் அவளே தொடர்ந்தாள்...
"வெடிச் சத்தம் கேக்கயில்
நிலத்தில் தோண்டிய
குழிகளில் பதுங்குவம்
வயல்களுக்கு உரம்
தெளிப்பது போல
வெடிகுண்டுகளை
வான ஊர்தியிலிருந்து
வீசுவர்...
உங்கள போல் அங்கே
சுதந்திரமாய்
நடக்க இயலாது
நானும் எண்ட தோழியும்
கதைத்துக் கொண்டே நடக்கையிலே
கண்ணிவெடியில்
கால் வைத்து
குழைந்து போனள் அவள்..
கதறியபடி நான்.....

ஒரு மாலை நேரம்
வெடிச் சத்தம் கேக்க...
சாப்பிட்டுக் கொண்டிருந்த நாங்க
பதுங்கு குழிக்குள்
ஒதுங்க வெளியே வந்தம்
"நீங்கள் போங்கள்
செய்து வைத்த
உணவு கொண்டு வாறன்"
எண்டு அம்மா மீண்டும்
சென்றள் வீட்டினுள்...

பதுங்கு குழியில்
பதுங்கியபடி
பாத்துக் கொண்டிருந்தம்
அம்மா வருகையை...
இருகைகளிலே உணவோடு
இரைப்புடன் ஓடி வந்தள்...

பாதி தூரத்தில்
பாவிகளின் குண்டுகளில்
வெடித்துச் சிதறினள்
எண்ட அம்மா..!!

எண்ட நான்கு வயது தம்பி
அறியா சிறுபிள்ளை அவனுக்கு
ஒண்டும் விளங்கயில்லை
சிறிது காலத்தில் அவனும்
செத்துப் போனன் உணவின்றி

இண்டைக்கு
என் அப்பா எவ்விடம்
ஏதும் அறியலை"

சொல்லி முடித்தாள்..

கண்ணீர் வழிய
வெறித்துப் பார்த்தாள்..
சிறு மௌனத்திற்கு பின்
நான் கூறினேன்...
"கவலை படதே ஒருநாள்
காலம் கனிந்து வரும்
நீயும் விளையாடுவாய்
சுதந்திரமாய் பார்
இயல்புக்கு பின்."

என்னை நோக்கினாள்
ஆழமாய் அவள்...
வெறுமையாய் சிரித்தாள்...
தொண்டைக்குழியை
அடைத்த அவளின்
துக்கங்களை மீறி
மெதுவாய்
வெளிப்பட்டது அவளது
வார்த்தைகள்...
"இயல்புக்கு பின்??...
இதுவே இயல்பாகி போனது...!!"

எனக்கு வலித்தது
அவள் வார்த்தைகள்...

அன்புடன் பொய் !!!



இரு கண்கள் விரிந்து
சிறு விரல் அசைத்து
மழலையினுள் எழும்
வியாக்கானங்கள்...

காதலன் காதலியை
உருவகப்படுத்தும் படிமங்களும்....

எதுகையில் பிடித்து
மோனையில் கோர்த்து
நீளும் கவிதைகளென..

நிலாபொழுதினில்
நினைவூட்டபடும்
நிலவினுள் நிலவும்
பாட்டியை பற்றியதாகினும்..

கடன் கேட்டோ கொடுத்தோ
கழிப்பவரின் வருகையை
சாத்தப்பட்டேயிருக்கும்
கதவும் அதன் இடுக்குகளில்
மறைக்கப்பட்ட உண்மைகளும்...


ஊர்ஜிதப்படுத்துகின்றன....
வகையான பொய்கள்
வரவேற்கவேபடுகின்றன
எப்பொழுதும் யாராகினும்..


Tuesday, April 20, 2010

காற்றாகிய நான் .




தனிமை சுவாசத்தை
விரும்பி சுவைக்கும் நீ
வலிய வெதும்புகிறாய்
இழந்த ஒற்றை சிறகிற்காய்
திசை தெரியா பறவையின்
உணர்தலுக்கு நிகர்போல்..

கிழித்தெறியப்பட்ட முகமூடியின்
துணுக்குகளில் ஒட்டியிருக்கும்
நச்சினால் நிறமிழந்தபடியே
காற்றாகிய நான்
இருள் அப்பியிருந்த
உன் அறையினுள்
தூசி படர்ந்த ஒளியாய்
நுழைகிறேன் மெல்ல...

எப்பொழுதும் போல் அப்பொழுதும்
அதே பார்வையில் நிதர்சனமாய்
வீசப்படுகிறேன் உன் மேல்...

Friday, April 16, 2010

முரண்



நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை

விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த...

அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய்..

தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய்...

மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும்....

காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும்....

திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...

கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன...